அமைதிக்காக போராடி வரும் என்னை கொல்ல சதி குமாரசாமி பகீர் தகவல்


அமைதிக்காக போராடி வரும் என்னை கொல்ல சதி குமாரசாமி பகீர் தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:45 PM GMT (Updated: 25 Jan 2020 8:37 PM GMT)

அமைதிக்காக போராடி வரும் என்னை கொல்ல சதி நடப்பதாக குமாரசாமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்தில் போராடி வரும் என்னை கொலை செய்ய சதி நடக்கிறதாம். என்னை கொலை செய்ய முயற்சி செய்பவர்கள் ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். என்னை கொன்றாலும் என்னை போல் அவர்கள் போராடுவார்கள். என்னை கொல்லலாம். எனது ஆதரவாளர்களை கொல்ல முடியாது.

சமூகத்தின் நலனுக்காக நான் நடத்தி வரும் போராட்டத்தை கண்டு பா.ஜனதா பயந்துபோய் உள்ளது. அதனால் அக்கட்சியினர் என்னை ‘பாகிஸ்தானி’ என்று அழைத்து அவமானப்படுத்துகிறார்கள். கொலை செய்ய வந்தவர்கள் மிரட்டுவது பயங்கர தந்திரம் என்றால், பா.ஜனதா அவமானப்படுத்தும் தந்திரத்தை பயன்படுத்துகிறது.

கர்நாடகத்தில் ஒக்கலிக தலைவர்களை தாக்கி பேசி வருவது இது ஒன்றும் புதிது அல்ல. பொய் குற்றச்சாட்டுகளை கூறுவது, மிரட்டும் தந்திரங்களை பயன்படுத்துவது போன்றவை தொடக்க முதலே இருக்கிறது. ஆனால் இப்போது கொலை செய்ய சதி செய்வது, ‘பாகிஸ்தானி’ என்று அழைப்பது போன்றவை ஒக்கலிக தலைவர் களுக்கு எதிராக நடைபெறும் மற்றொரு வகையான தாக்குதல் ஆகும்.

ஒக்கலிகர்கள் போராட்டத்தில் குதித்தாலோ அல்லது ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலோ அதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள், அவர்களை மிரட்டுவது, அரசுகளை கவிழ்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடக்கத்தில் இருந்தே நடந்து வருகிறது. தேவேகவுடாவையே கடுமையாக தாக்கி வசைபாடிய காலம் உண்டு. அவருக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காமல் செய்தவர்களை இந்த சமூகம் பார்த்துள்ளது. இப்போது இந்த சக்திகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன. இதற்ெகல்லாம் பயப்படுபவன் நான் அல்ல.

என்ைன அவமானப்படுத்தி வரும் பா.ஜனதாவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் மரபணு பாகிஸ்தானில் இருக்கலாம் அல்லது ஜெர்மனியில் உள்ள நாஜிக்களிடம் இருக்கலாம். ஆனால் எனது மரபணு இந்த மண்ணில் உள்ளது. என்னை கொலை செய்ய முயற்சி செய்பவர்கள் புதிய பயங்கரவாதிகள். அவமானப்படுத்துபவர்கள் ஒக்கலிக விரோதிகள். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story