பெரியகங்கணாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்: வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்


பெரியகங்கணாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்: வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 27 Jan 2020 12:41 AM GMT)

ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பெரியகங்கணாங்குப்பம் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் வேண்டுகோள் விடுத்தார்.

கடலூர்,

கடலூர் ஊராட்சி ஒன்றியம் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாறன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிராம நிர்வாகம் மக்களின் கையில் தான் உள்ளது. நீங்கள் தான் அரசு திட்டங்கள் சரியாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். உங்களுக்குள் பேசி என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கோடைக்காலத்தில் மற்ற மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருந்தாலும் நமது மாவட்டத்தில் அந்த பிரச்சினை இல்லை.

இது நிரந்தரம் என்று சொல்ல முடியாது. ஆகவே தண்ணீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அரசு கட்டிடங்களில் அரசு அதிகாரிகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவார்கள். நிதியை பெறுவதில் மட்டும் முன்மாதிரியாக இல்லாமல் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும்.

அரசும் தனிநபரும் சேர்ந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியும். டெங்கு கொசுவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக செயல்பட வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டும். அதிக வட்டிக்கு வெளி நபர்களிடம் கடன் வாங்க வேண்டாம். அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி அதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான ராஜகோபால் சுங்கரா பேசுகையில், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டு பெற வேண்டும். ஏற்கனவே நீங்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் ரூ.4.78 லட்சம் செலவில் சிறிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மா விளையாட்டு மையமும் அமைக்கப்படுகிறது. குளங்கள் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து சுகாதார உறுதிமொழி, வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பையை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பொதுமக்களுக்கு வழங்கினார். பசுமை வீடு கட்ட வேலை உத்தரவும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) ‌ஷாகிதா பர்வின், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், கடலூர் தாசில்தார் செல்வக்குமார், தேர்தல் தாசில்தார் பாலமுருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் இளைஞர்கள் கலந்து கொண்டு, ஊராட்சி பகுதியில் புகையிலை பொருட்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது. சில இடங்களில் கஞ்சா விற்பனை, போதை ஊசியும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சிலர் வீட்டு மனைப்பட்டா கேட்டும், சுடுகாடு, இடுகாடு கேட்டும் பேசினர். கூட்டத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தி தருவது, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி ராமலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜயராயலு, வேல்முருகன், கிரிஜா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story