கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 11:15 PM GMT (Updated: 27 Jan 2020 9:48 PM GMT)

தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (வயது 25). இவர், துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும், புதுவண்ணாரப்பேட்டை லட்சுமிஅம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த பரமேஸ்வரி(21) என்பவரும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர்.

கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி சண்டைபோட்டு கொண்டதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் பரமேஸ்வரி, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் சமாதானம் அடைந்த அவர், மீண்டும் சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டுக்கு வந்தார்.

ஆனால் அவரது கணவர் கிருஷ்ணபிரசாத், பரமேஸ்வரியின் நடத்தை சரியில்லை என்று கூறி அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இது சம்பந்தமாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரமேஸ்வரி கடந்த 6-ந்தேதி புகார் செய்தார். அதில், தன்னை காதல் கணவருடன் சேர்த்து வைக்குமாறு கூறினார். இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலை பரமேஸ்வரி திடீரென்று திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கவேண்டும் என்று கோரி கையில் தயாராக கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த போலீசார், ஓடிவந்து அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் கூறியதால் சமாதானம் அடைந்தார். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story