பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போர்க்கொடி


பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போர்க்கொடி
x
தினத்தந்தி 27 Jan 2020 10:21 PM GMT (Updated: 27 Jan 2020 10:21 PM GMT)

பாகிஸ்தான் விமான படை விமானி மகன் பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மும்பை,

பாகிஸ்தான் விமான படை விமானியாக இருந்தவர் அர்‌ஷாத் சமிகான். இவரது மகன், இந்தி பாடகர் அட்னன் சமி. இவர் லண்டனில் பிறந்தவர்.

இந்திய குடியுரிமை கோரி 2015-ம் ஆண்டு விண்ணப்பித்தார். 2016-ம் ஆண்டு, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டுள்ள இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

இதையொட்டி அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறிய தாவது:-

கார்கில் போரில் இந்தியாவுக்காக சண்டை போட்டவர் முன்னாள் ராணுவ அதிகாரி முகமது சனவுல்லா. ஆனால் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு பின்னர், இவர் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சண்டை போட்ட குடும்பத்தை சேர்ந்த அட்னன் சமிக்கு பத்ம ஸ்ரீ விருது தந்து கவுரவிப்பதா? இது எந்த விதத்தில் சரியானது? இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறிய தாவது:-

பாகிஸ்தானை சேர்ந்த எவரும் ‘ஜெய் மோடி' என்று கோஷமிட்டால், அவர் இந்தியாவின் குடியுரிமையை பெறுவதுடன் ‘பத்மஸ்ரீ’ விருதையும் பெறமுடியும். இது நாட்டின் பெருவாரியான மக்கள் பிரச்சினைகளை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி. இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி சினிமா பிரிவு தலைவர் அமேய் கோப்கர் கூறுகையில், “அட்னன் சமி உண்மையான இந்திய குடிமகன் இல்லை. அவருக்கு எந்த விருதும் வழங்கக்கூடாது என்பது நவநிர்மாண் சேனாவின் பார்வையாகும். அவரை பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கும் முடிவை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த முடிவை திரும்ப பெறவேண்டும்” என்றார்.

Next Story