சாயல்குடி அருகே, நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்


சாயல்குடி அருகே, நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:45 PM GMT (Updated: 28 Jan 2020 2:39 PM GMT)

சாயல்குடி அருகே நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார்.

சாயல்குடி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சில்ஓடைபாலன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கபிவேல் மகன் தங்கமணி (வயது 20). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் அபேல் என்பவர் சொந்தமாக வைத்திருக்கும், கதிர் அறுக்கும் எந்திரத்தில் வேலை செய்து வருகிறார். இந்த எந்திரத்தில் வேலைக்கு சேர்ந்ததும், பல்வேறு ஊர்களுக்கு சென்று நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்து வருவதால், தங்கமணி இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து வாலிநோக்கம் பகுதியில் அறுவடை நடைபெற்று வருவதால் அந்த பகுதிக்கு எந்திரத்துடன் சென்று நெல் அறுவடை பணியில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் நேற்று சேரந்தை கிராமத்தை சேர்ந்த முத்திருளாண்டி என்பவருக்கு சொந்தமான வயலில் அறுவடை பணி நடைபெற்று கொண்டிருந்தபோது தங்கமணியின் வலது கால் எதிர்பாராதவிதமாக நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் சிக்கியது. இந்த கொடுமையான விபத்தில் அவரது கால் சிதைந்து சின்னாபின்னமாகியது. அதில் வேதனையால் தங்கமணி துடிதுடித்தார்.

 இதுகுறித்து தகவலறிந்த வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வாலிநோக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story