குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 6:49 PM GMT)

குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 18-வது வார்டு பகுதியில் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் உள்ளது. இந்த மையத்தில் சில மாதங்களே குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி வந்தனர்.

கடந்த சில மாதமாக இந்த மையத்தில் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு பதில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் பல்வேறு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை 18-வது வார்டு பகுதி திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கொட்டப்படுவதால் 18-வது வார்டு முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று திடக்கழிவு மேலாண்மை மையம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சியை கண்டித்து கோஷங்களை பொதுமக்கள் எழுப்பினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

நந்திவரம்கூடு-வாஞ்சேரி பகுதி குப்பைகளை கீரப்பாக்கம் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story