ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி ‘வார்டு’


ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி ‘வார்டு’
x
தினத்தந்தி 28 Jan 2020 11:45 PM GMT (Updated: 28 Jan 2020 7:59 PM GMT)

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி ‘வார்டு’ தயார் நிலையில் உள்ளது.

சென்னை,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பலர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரசால் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீனா மக்கள் முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கவும், பரவாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதேபோல தமிழக சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள், நவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றனர். இதேபோல துறைமுகங்களிலும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரத்யேக ‘வார்டு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

கொரோனா வைரசால் பதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க 6 தனித்தனி அறைகளுடன், படுக்கை வசதி கொண்ட தனி ‘வார்டு’ தயாராக உள்ளது.

ஒவ்வொரு அறையிலும் நவீன மருத்துவ கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ‘வார்டில்’ 10 டாக்டர்கள், 18 செவிலியர்கள் மற்றும் 20 மருத்துவமனை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த ‘வார்டில்’ பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உடை, முகக்கவசம் மற்றும் மூக்குக் கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல நோய் தொற்று பரவாமல் இருக்க 900 முகக்கவசமும், 90 தற்காப்பு உடை மற்றும் உபகரணங்களும், 6 ஆயிரம் 3 அடக்கு முகக்கவசமும் தயாராக உள்ளது. மேலும் கைகளை தொடர்ந்து சுத்தம் செய்ய 300 ‘ஹேன்ட் சானிடைசரும்’ உள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை, விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனை கொண்டு வர சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் இருந்து இந்த ‘வார்டுக்கு’ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்ல தனி ‘லிப்ட்’ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் மற்றும் ‘லிப்டில்’ பணிபுரியும் ஊழியர்களுக்கும் பிரத்யேக தற்காப்பு உடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்புவதற்கு தேசிய நோய் தடுப்பு மையத்தின் அறிவுரைப்படி உபகரணங்களும் தயாராக உள்ளன.

இந்த மாதிரிகள் புனேக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும். மேலும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி ‘வார்டுகளில்’ உள்ள அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். மருத்துவமனையில் உள்ள மற்ற அறைகள் மற்றும் ‘வார்டுகளில்’ இருந்து இந்த ‘வார்டு’ தனிமைப்படுத்தப்பட்டு மற்ற நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் அனுமதிக்கப்படாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story