கொன்னக்குளம் பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் - எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை


கொன்னக்குளம் பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் - எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2020 10:45 PM GMT (Updated: 29 Jan 2020 2:02 PM GMT)

மானாமதுரை அருகே கொன்னக்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ நாகராஜனிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக போதிய மழையில்லாததால் இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு குடிதண்ணீருக்குகூட கடுமையான தட்டுப்பாடு நிலவி வந்தது. மேலும் அப்போதைய காலக்கட்டத்தில் விவசாயம் என்பது முற்றிலும் கேள்விக்குறியானதாக இருந்ததால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய தொழிலை மறந்து விட்டு வேலை தேடி வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் பெய்ய வேண்டிய பருவ மழை நன்றாக பெய்ததாலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்கள், வரத்துக்கால்வாய்கள் ஆகியவை குடிமராமத்து பணி செய்யப்பட்டதால் அப்போது பெய்த பருவ மழை இந்த நீர்நிலைகளில் நிரம்பி காணப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் எஞ்சியிருந்த விவசாயிகள் ஆர்வமுடன் தங்களது விவசாய நிலங்களில் விவசாயத்தை தொடங்கி தற்போது நடப்பாண்டில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மானாமதுரை அருகே உள்ள கொன்னக்குளம், மணக்குளம், சூரக்குளம், குலையனூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் சுமார் தற்போது 2 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதன் அருகே உள்ள குலையனூரில் மட்டும் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த கொன்னக்குளம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால் தற்போது அறுவடை செய்த நெல் பயிர்களை தரையில் ஆங்காங்கே குவித்து வைக்க வேண்டி நிலை உள்ளது. இதனால் தற்போது வெயில் மற்றும் பனியால் நெல் முற்றிலும் சேதமடைந்து வருகிறது. இதையடுத்து இப்பகுதியில் விரைவில் நெல்கொள்முதல் அமைக்க இப்பகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:– கொன்னக்குளம் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் இல்லாததால் இந்த பகுதியில் விளைந்த நெல் மூடைகள் திறந்த வெளியில் இருப்பதால் பகல் நேரங்களில் அடிக்கும் வெயிலில் நெல் மூடைகள் சேதமாகி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி பெரியசாமி மற்றும் விவசாயிகள் மூலம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே அரசின் சார்பில் இப்பகுதியில் விரைவில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story