குடிபோதையில் தகராறு; வடமாநில வாலிபர் குத்திக்கொலை - நண்பர் கைது


குடிபோதையில் தகராறு; வடமாநில வாலிபர் குத்திக்கொலை - நண்பர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2020 11:15 PM GMT (Updated: 29 Jan 2020 9:18 PM GMT)

திருப்போரூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் அருகே கொளத்தூர் பெருமாள்கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரேன் கூர்மி (வயது 35). அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், காயாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார். இவருடன் அசாம் மாநிலத்தை சேர்ந்த நண்பர்கள் சிலரும் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரேன் கூர்மி, தனது நண்பர்கள் 5 பேருடன் மது குடித்ததாக கூறப்படு கிறது. அப்போது நண்பர் ஸ்ரீபிரோதிப் காகாளரி (45) என்பவருக்கும், பிரேன் கூர்மிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது பிரேன் கூர்மியின் கழுத்தில் ஸ்ரீபிரோதிப் காகாளரி கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்த அவரை சக நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே பிரேன்கூர்மி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில வாலிபரின் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காயார் காட்டில் பதுங்கி இருந்த ஸ்ரீபிரோதிப் காகாளரியை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தகராறு நடந்தபோது பிரேன் கூர்மி ஸ்ரீபிரோதிப் காகாளரி மீது ஏறி அமர்ந்து பலமாக தாக்கியுள்ளார். இதனால் அவர் வலி தாங்காமல் கையில் இருந்த கத்தியால் பிரேன்கூர்மியின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story