சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்; மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன அதிகாரி


சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்; மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன அதிகாரி
x
தினத்தந்தி 29 Jan 2020 11:00 PM GMT (Updated: 29 Jan 2020 10:36 PM GMT)

சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் திருவள்ளுவர்புரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவர், வேளச்சேரி விஜயநகரைச் சேர்ந்த துர்கா(26) என்பவரை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். துர்கா, விவாகரத்துகேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சரத்குமார், பள்ளிக்கரணையில் உள்ள புற்றுகோவில் அருகே தனது மனைவி துர்காவை சந்தித்து பேசினார். விவாகரத்து செய்யவேண்டாம். நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். ஆனால் அதற்கு துர்கா மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சரத்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துர்காவை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர், பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story