கொரோனா வைரஸ் சந்தேகத்தால் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி


கொரோனா வைரஸ் சந்தேகத்தால் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 29 Jan 2020 11:26 PM GMT (Updated: 29 Jan 2020 11:26 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை,

சீனாவில் பலரின் உயிரிழப்புக்கு காரணமான கொரோனா வைரஸ் நோய் வேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த நோய் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து மராட்டியம் வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தால், அவர்கள் உடனடியாக மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியிலும், புனே நாயர் ஆஸ்பத்திரியிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநில நோய் கண்காணிப்பு துறை அதிகாரி டாக்டர் பிரதீப் அவ்தே கூறியதாவது:-

கடந்த 21-ந் தேதி சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. கடந்த 24-ந் தேதி இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடன் சேர்த்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் மும்பை மருத்துவமனையிலும், 3 பேர் புனேயிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் நாந்தெட்டில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 4 ஆயிரத்து 600 பேர் இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

Next Story