சட்டப்பேரவை குழுவுக்கு மனுக்கள் அனுப்பலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்


சட்டப்பேரவை குழுவுக்கு மனுக்கள் அனுப்பலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:45 PM GMT (Updated: 30 Jan 2020 4:44 PM GMT)

சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு பொது பிரச்சினைகள் குறித்து மனுக்கள் அனுப்பலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2018-2020-ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு நெல்லை மாவட்டத்தில் விரைவில் கூட இருக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் பொது பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம்.

மனுதாரர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுக்களை தமிழில் எழுதி 5 நகல்களுடன் தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு வருகிற 14-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சினைகள் குறித்தும் மனுக்கள் அளிக்கலாம். ஒரு மனு ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

தனிநபர் குறைகள், கோர்ட்டில் உள்ள பிரச்சினை, வேலை வாய்ப்பு, ஓய்வூதியம், பட்டா, இலவச உதவி, வங்கி கடன், தொழில் கடன், அரசு பணியிட மாற்றம், அரசு அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு ஆகியவை குறித்த மனுக்களாக இருக்க கூடாது. பொது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக மனுக்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு கிடைக்கும் மனுக்கள் மீது சட்டப்பேரவை மனுக்கள் குழு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது மனுதாரர் முன்னிலையில் அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்கப்படும். அதுகுறித்த தகவலும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story