குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2020 9:45 PM GMT (Updated: 30 Jan 2020 9:21 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று மனித சங்கிலி -மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று தென்காசியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அங்குள்ள புதிய பஸ்நிலையம் அருகில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சாதிர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், எஸ்.டி.பி.ஐ. செய்யது அலி பாதுஷா, காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன், ம.தி.முக. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அலி மற்றும் திராவிடர் கழகம், ஜமாஅத்துல் உலமா சபை, ஐக்கிய ஜமாத், தமிழ்ப்புலிகள், மாணவர் இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, கேம்ப்ஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

செங்கோட்டை

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலை முன்பு நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் வேலுமயில் தலைமை தாங்கினார். சுமார் ஒரு கி.மீ.் தொலைவுக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மனித சங்கிலியாக நின்றனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் நகர தலைவர் ராமர், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர்மாரியப்பன், அ.ம.மு.க. நகர செயலாளர் ராமசாமி, கலைஞர் தமிழ் சங்கம் செயலாளர் ஆபத்துகாத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் ரகீம் தொடங்கி வைத்தார். மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கோகுலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

வள்ளியூர்

வள்ளியூரில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஞானதிரவியம், எம்.பி. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

சிவகிரி

சிவகிரி பஸ்நிலையம் அருகே காந்தி கலையரங்கத்தில் இருந்து மத்திய கட்டுறவு சங்கம் வரை தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். தென்காசி முன்னாள் எம்.பி. லிங்கம் உள்ளிட்ட காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் ஜமாத் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து களக்காடு பஸ்நிலையம் அருகில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. நாங்குநேரி தொகுதி செயற்குழு உறுப்பினர் மீராஷா தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட 16 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீரவநல்லூர்

வீரவநல்லூர் வேன் ஸ்டாண்டு அருகில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இம்ரான் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று மாலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story