மின்சார ரெயில் பெண்கள் பெட்டியில் கழிவறை; அரவிந்த் சாவந்த் எம்.பி. கோரிக்கை


மின்சார ரெயில் பெண்கள் பெட்டியில் கழிவறை; அரவிந்த் சாவந்த் எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2020 11:36 PM GMT (Updated: 30 Jan 2020 11:36 PM GMT)

மின்சார ரெயில்களில் உள்ள பெண்கள் பெட்டியில் கழிவறை அமைக்கப்பட வேண்டும் என அரவிந்த் சாவந்த் எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

மும்பை, 

பன்வெல் - தானே இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கி வைக்கும் விழா நேற்று சி.எஸ்.எம்.டி.யில் நடந்தது. இந்த விழாவில் ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி, மாநில மந்திரிகள் அஸ்லம் சேக், அதிதீ தட்காரே, எம்.பி.க்கள் அரவிந்த் சாவந்த், மனோஜ் கோடக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அரவிந்த் சாவந்த் எம்.பி., ‘‘மும்பையில் சர்ச்கேட் - விரார், சி.எஸ்.எம்.டி. - கர்ஜத், கசாரா வரை மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட் டோர் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர்.

சில நேரங்களில் விபத்து, வெள்ளம், தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்சினைகளால் மின்சார ரெயில்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மின்சார ரெயில்களில் உள்ள பெண்கள் பெட்டியில் கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும்’’ என்றார்.

மாநில மந்திரி அஸ்லாம் சேக் ரெயில்களிலும் வை-பை வசதி அறிமுகம் செய்யப்படவேண்டும் என்றார்.

பின்னர் பேசிய மந்திரி சுரேஷ் அங்காடி, அரவிந்த்சாவந்த், அஸ்லம் சேக் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு செய்ய கூறுவதாக பதில் அளித்தார்.

Next Story