மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 3:24 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மற்றும் நேற்று (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர். இதன்படி 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும். ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை மாற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அதிகாரிகளுக்கு வேலை நேரத்தை வரைமுறை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட வங்கிகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சுமார் ரூ.100 கோடிக்கான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி நேற்று புதுக்கோட்டை மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் ராமதுரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் அருணாசலம் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story