கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்ற வழக்கு: பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்ற வழக்கு: பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 1 Feb 2020 11:15 PM GMT (Updated: 1 Feb 2020 5:32 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்று புதைத்த வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சையத் நகரை சேர்ந்தவர் கலீல் பாஷா. இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷபானா (வயது 32). அதே சையத் நகரை சேர்ந்தவர் சதாம் உசேன் (26). திருமணம் ஆனவர். ஷபானாவிற்கும், சதாம் உசேனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் இருந்த உறவை ஷபானா திடீரென துண்டித்தார்.

இதையடுத்து ஷபானாவிற்கும், சிங்காரப்பேட்டை அருகே உள்ள மகனூர்பட்டியை சேர்ந்த மகபூப் ரஹிமான் (30) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. ஆனாலும் சதாம் உசேன், ஷபானாவை அடிக்கடி சந்தித்து தொந்தரவு செய்து வந்தார். இது ஷபானாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

கொன்று புதைப்பு

இது குறித்து ஷபானா தனது 2-வது கள்ளக்காதலன் மகபூப் ரஹிமானிடம் கூறினார். இதையடுத்து கடந்த 7.8.2017 அன்று சதாம் உசேன் ஷபானாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த ஷபானாவும், மகபூப் ரஹிமானும் சேர்ந்து சதாம் உசேனை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே மகனூர்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் மகபூப் ரஹிமான் சரண் அடைந்தார். அவர் கூறிய தகவல்படி, கொலைக்கு உடந்தையாக இருந்த ஷபானாவையும், கொலைக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்த ஷபானாவின் தம்பி ஜாகீர் (30) என்பவரையும் சிங்காரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி கொலை செய்தல், கூட்டு சதி குற்றத்திற்காக மகபூப் ரஹிமான், ஷபானா ஆகிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அதே போல கொலைக்கு சதி திட்டம் தீட்டிய குற்றத்திற்காக ஷபானாவின் தம்பி ஜாகீருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பாஸ்கர் ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story