வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை


வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 7:25 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தஞ்சையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

20 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட வங்கித்துறையை சேர்ந்த 9 தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

2-வது நாள் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 350 வங்கி கிளைகளில் பணியாற்றும் 3,200 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன. பின்னர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தஞ்சை ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வங்கி பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். பணி ஓய்வு பணப்பயன்களில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் காரணமாக ரூ.600 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்த போராட்டத்தினால் ஓய்வூதியர்கள், வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.


Next Story