மத்திய பட்ஜெட் குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மக்கள் கருத்து


மத்திய பட்ஜெட் குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மக்கள் கருத்து
x
தினத்தந்தி 1 Feb 2020 10:30 PM GMT (Updated: 1 Feb 2020 7:51 PM GMT)

மத்திய பட்ஜெட் குறித்து பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமே‌‌ஷ் கூறுகையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடக்கவுரையில் இந்திய ஜனாதிபதி விவசாயம் தான் நாட்டின் முக்கியம் என்றும், அதற்கு திருக்குறளை உதாரணமாகவும் எடுத்துக் கூறி தெரிவித்தார். ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்த நிதி போதாது. கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் சீரழித்து விட்டார்கள். நாட்டில் 100 விமான நிலையங்கள் தொடங்கப்படும் என்றும், எல்.ஐ.சி.யின் ஒரு பங்கினை விற்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களை தனியார் மயமாக்கப்படும் என்று போராடி கொண்டிருக்கிற நிலையில், அதனை புதிதாக தொடங்கப்படும் என்று தெரிவித்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதே போல் எல்.ஐ.சி. உள்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது. புதிய வரி விதிப்பு முறை சரியானதாக இல்லை. இதனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதி பட்ஜெட் இந்தியாவை இருண்ட காலத்தை நோக்கி அழைத்து செல்வது போல் தெரிகிறது என்றார்.

கிசான் கிரேடிட் கார்டு

அகில இந்திய மாதர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் கலையரசி கூறுகையில், பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் போது ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் வேலை வழங்கப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பு இல்லை. இதனால் இந்த பட்ஜெட் மக்களுக்கு கண் துடைப்பாக உள்ளது என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் கூறுகையில், விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த இந்த பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி குறித்து சலுகை ஏதுவும் அறிவிக்காதது ஏமாற்றம். பிரதம மந்திரி வேளாண் பயிர்காப்பீட்டு திட்டத்தை, பயனுள்ளதாக தனிநபர் காப்பீட்டு திட்டமாக திருத்தி அறிவிக்காததும் வேதனை அளிக்கிறது. விவசாய விளை பொருட்களுக்கு அறிவிக்கின்ற விலையை விட கூடுதலாக 50 சதவீதம் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகவில்லை. நிறுத்தப்படுவதாக கூறப்பட்டு வரும் விவசாயிகளின் பயிர்கடன்களுக்கு, நகை கடன்களுக்கு மானியம் குறித்து அறிவிப்பு வெளி வராத வகையில், அதிகமாக விவசாயிகளுக்கு கிசான் கிரேடிட் கார்டு கொடுக்கப்படும் என்ற அறிவிப்பால் பயனில்லை என்றார்.

நாட்டின் வளர்ச்சிக்காக...

கல்லூரி மாணவர் பிரபாத்கலாம் கூறுகையில், வருமான வரி செலுத்தாமல் போலி கணக்குகள் காட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. சுயதொழில் தொடங்குவதற்கான வசதிகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் அறிவித்திருந்ததால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை மேம்படும். சரியான கல்வி முறை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து அறிவிப்பு செய்திருந்தால், தொடர்ந்து பறிப்போகும் உயிர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். தற்போது அறிவித்து இருக்கிற நிதி அறிக்கையினை சரியாக நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினால் நம் நாடு வளர்ந்த நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பெறும். இதற்கு இடையில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் தற்போது உள்ள நிலையை விட நம் நாடானது படு மோசமான நிதி பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டு, நம் நாட்டையே விற்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றார்.

பெரிதும் பயனடைவார்கள்

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி மின் பொறியாளர் சம்பத் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வரவேற்க கூடியது. கடந்த ஆண்டு அறிவித்ததைவிட கூடுதலாக 40 சதவீதம் இந்த ஆண்டு விவசாயத்துறை, ரெயில்வேத்துறை, கல்வித்துறை மற்றும் வருமான வரி விலக்கு உள்ளிட்ட முக்கிய அம்சங்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றினால் நாட்டு மக்கள் பெரிதும் பயனடைவார்கள். ஆனால் இந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரங்கள் எவ்வாறு திரட்டப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கான நிதி திரட்டுவதாக கூறி பொதுமக்கள் தலையில் சுமையை ஏற்றப்படுமா? என்ற அச்சமும் எங்களிடம் உள்ளது. இதனை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

கீழக்கவட்டாங்குறிச்சி சமூக ஆர்வலர் தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக கால்நடை வளர்ப்பினை ஊக்கப்படுத்தி கிராமங்கள் தோறும் சாண எரிவாயு நிலையங்களை அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் இல்லை. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆங்காங்கே சிறப்பு இயற்கை விவசாய கிராமங்களை தத்தெடுத்து அரசே முன்னோடி கிராமங்களை உருவாக்கி கிராம பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

Next Story