கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம் ; மகேஷ் குமட்டள்ளிக்கு டெல்லி பிரதிநிதி பதவி


கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம் ; மகேஷ் குமட்டள்ளிக்கு டெல்லி பிரதிநிதி பதவி
x
தினத்தந்தி 2 Feb 2020 12:25 AM GMT (Updated: 2 Feb 2020 12:25 AM GMT)

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் என்றும், 13 மந்திரிகள் பதவி ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பிறகு சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார்.

ஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை இன்னும் விஸ்தரிப்பு செய்யப்படவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கியது. 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் டெல்லியில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவுக்கு திரும்பினார்.

இந்த நிலையில் எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா பட்டீல் யத்னாள், உமேஷ்கட்டி உள்பட பலர் வந்து நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மந்திரிசபை விரிவாக்கத்தில் 13 பேருக்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கி இருக்கிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 10 பேருக்கும், கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் பதவி வழங்க வேண்டும் என்று மேலிட தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் எடியூரப்பா அவர்களில் ஒருவருக்கு வேறு பதவி வழங்குவதாக கூறியதாகவும், ஆனால் அதை ஏற்க அந்த எம்.எல்.ஏ.க்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடியூரப்பா இறங்கியுள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர், பி.சி.பட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, ஸ்ரீமந்த் பட்டீல், சுதாகர், நாராயணகவுடா, சிவராம் ஹெப்பார், ஆனந்த்சிங், பைரதி பசவராஜ், கோபாலய்யா ஆகிய 10 பேருக்கும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி ஆகியோருக்கும், பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சி.பி.யோகேஷ்வருக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஒருவரான மகேஷ் குமட்டள்ளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவிக்கு பதிலாக கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Next Story