குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 9:01 PM GMT)

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). இவருடைய மனைவி வள்ளியம்மாள் (30). இவர் மூலனூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் ராமசாமிக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை. எனவே குழந்தைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வள்ளியம்மாள் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குழந்தை இல்லை என்பதால் வள்ளியம்மாள் மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கத்தை கணவரிடம் கூறி, வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனாலும் 2-வது திருமணம் செய்துகொள்ள ராமசாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சாவு

இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளியம்மாளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி, வள்ளியம்மாளை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போதுதான், கண்வலி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வள்ளியம்மாளுக்கு தாராபுரம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வள்ளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் இறந்தார். இது குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் போலீஸ் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story