பொள்ளாச்சி அருகே ஆழியாறில் பரபரப்பு: காட்டு யானை துரத்தியதால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்


பொள்ளாச்சி அருகே ஆழியாறில் பரபரப்பு: காட்டு யானை துரத்தியதால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 7:54 PM GMT)

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் காட்டு யானை துரத்தியதால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பொள்ளாச்சி,

வனப்பகுதிகளில் மழை இல்லாததால் நீரோடைகள் வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக தண்ணீர் தேடி யானை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் குடிக்க ஆழியாறு அணைக்கு காலை, மாலை நேரங்களில் யானை கூட்டம் வருகின்றன. இதில் ஒற்றை காட்டு யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஆழியாறில் தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை யானை அணைக்குள் தண்ணீர் குடித்து விட்டு வால்பாறை ரோட்டை கடக்க முயன்றது. இதையடுத்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். இதையடுத்து ரோட்டோரத்தில் நின்ற யானை சிறிது நேரம் கழித்து சாலையை கடந்து வனத்திற்குள் சென்றது.

சுற்றுலா பயணிகள் ஓட்டம்

இந்த யானை தொடர்ந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் சோதனை சாவடிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வனஉயிரின விளக்க மையத்திற்கு வந்தது. பின்னர் ஆத்திரத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த வனவிலங்குகள் குறித்த விளக்க பலகைகளை தும்பிக்கையால் தூக்கி வீசியது. தந்தத்தால் முட்டி பலகைகளை சேதப்படுத்தியது. அதை தொடர்ந்து அங்கிருந்து சோதனை சாவடி வழியாக வால்பாறை ரோட்டிற்கு வந்தது. திடீரென்று யானை வால்பாறை ரோட்டில் ஆழியாறு அறிவுத்திருக்கோவில் பகுதியை நோக்கி சுற்றுலா பயணிகளை துரத்தியது. யானை வேகமாக வருவதை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.

யானையை பார்த்த பயத்தில் சுற்றுலா பயணி ஒருவரின் கார் கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்‌‌ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. யானை படகு இல்லம் வழியாக அணைக்குள் இறங்கியது. அதன்பிறகே சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை நடமாட்டம் குறித்து வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனவர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சுற்றுலா பயணிகள் கவனம்

வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க ஆழியாறு அணைக்கு வந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் சோதனை சாவடி பகுதியில் முகாமிட்டு உள்ளது. யானைக்கு மதம் பிடித்து உள்ளதால் வனஉயிரின விளக்க மையத்தை சேதப்படுத்தி உள்ளது. ஆழியாறு அணைக்குள் இறங்கி சென்ற யானை, நவமலைக்கு செல்லும் வழியில் சோதனை சாவடியையும் மிதித்து சேதப்படுத்தியது. யானையின் நடமாட்டத்தை தொடர்ந்துகண்காணித்து வருகிறோம்.சுற்றுலா பயணிகள் வால்பாறை ரோட்டில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது வால்பாறையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையோரத்தில் யானை நிற்கிறதா? என்பதை பார்த்து கவனமாக செல்ல வேண்டும். யானையை பார்த்தால் தொந்தரவு செய்ய கூடாது. வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆழியாறில் சுற்றி திரியும் யானை ஆட்களை தாக்குவதில்லை. யானை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story