வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 10:55 PM GMT)

தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 23.12.2019 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 1.1.2020 அன்று தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த 4, 5, 11, 12-ந்தேதிகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 43 ஆயிரத்து 824 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அனுப்பி கள ஆய்வுகள் நடைபெற்று வந்தது.

படிவம் 7, 8, 8ஏ உள்ளிட்ட படிவங்கள் மீது 100 சதவீதம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களஆய்வு செய்து தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்து இருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் இந்த பணி நடந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு பணிகளை, இந்திராநகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் படிவம் 6, படிவம் 7, 8 வழங்கியுள்ளவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தாசில்தாரிடம், படிவங்களை உடனடியாக ஆய்வு செய்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்தல் வருவாய் ஆய்வாளர் சரவணபவன்ராஜ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உச்சிமாளி, சுந்தரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story