குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பங்கேற்பு


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 6 Feb 2020 10:29 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமேசுவரம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பலதுறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள் பட்ஜெட்டில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. நாட்டில் விவசாயிகள் பிரச்சினை தீரவில்லை. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. இப்படி ஆயிரம் பிரச்சினைகள் நாட்டில் இருக்கும்போது அதை தீர்க்காமல் மத்திய அரசோ குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதில் தான் அக்கறை காட்டி வருகிறது.

அடிபணிய வைக்க முயற்சி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது அவரது சொந்த கருத்து அல்ல. இதுபோல் சொல்ல அவரை பின்னால் இருந்து நிர்பந்திக்கிறார்கள். நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் அப்படி பேசியுள்ளார். பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக பேசுபவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் தமிழகத்தில் உள்ளவர்களை அடி பணிய வைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்வேல், தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பேட்ரிக், வக்கீல் ரவிச்சந்திரராமவன்னி, நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன், நாகராஜ், வில்லாயுதம், சுந்தர்ராஜன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story