தலைவாசலில், சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்


தலைவாசலில், சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 9 Feb 2020 12:30 AM GMT (Updated: 8 Feb 2020 6:37 PM GMT)

தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய பெருவிழா ஆகியவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசுகிறார். வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விவசாய பெருவிழா குறித்து பேசுகிறார். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் திட்ட விளக்கவுரை ஆற்றுகிறார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். மேலும் அவர் விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைப்பதுடன் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். முடிவில் கலெக்டர் ராமன் நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார்.

பயிற்சி வகுப்புகள்

அதைத்தொடர்ந்து நாளை(திங்கட்கிழமை), நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கும் கருத்தரங்கில் சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு கால்நடைகள் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

விழாவையொட்டி கால்நடை கல்லூரிகளில் சேர்வது தொடர்பாக பேராசிரியர் களும், கல்வியாளர்களும் விளக்கம் அளிக்கின்றனர். கால்நடை மற்றும் வேளாண்மைதுறை சார்பில் 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகளுக்கு பயன்படக் கூடிய நவீன எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்தும், நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு செயல்விளக்கமும் அளிக்கப்படுகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 3 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலத்துக்கு வந்தார்.

சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய பெருவிழா நடைபெற இருப்பதால் அலங்கார வளைவுகள், பிரமாண்ட மேடை, கொடி தோரணங்கள் என தலைவாசல் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையொட்டியும், விழாவையொட்டியும் சேலம் மாநகர் மற்றும் புறநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story