9, 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது முதல்-அமைச்சர் பேட்டி


9, 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது முதல்-அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2020 12:15 AM GMT (Updated: 8 Feb 2020 7:27 PM GMT)

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்றும் கோரிக்கை வந்து கொண்டிருக்கிறதே?

பதில்: ஏற்கனவே பலமுறை ஊடகங்களின் வாயிலாக தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

கைது நடவடிக்கை

கேள்வி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டிற்கு அரசு உடந்தையாக உள்ளதா?

பதில்: எப்படி உடந்தையாக இருக்கிறோம் என்று சொன்னால்தானே தெரியும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரைக்கும், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதால் தான் அதில் தலையிடவில்லை. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்கின்ற காரணத்தினாலே அதில் நடைபெற்றுள்ள தவறினை அறிவதற்கு அந்த அமைப்பு உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று காவல் துறைக்கு புகார் செய்து, காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு, தவறில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கேள்வி: தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறதே ?

பதில்: அது அவர்களுடைய விருப்பம்.

வயதானவர்

கேள்வி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்துத்துவா அமைப்பைப் போல செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சொல்லியிருக்கின்றனரே? வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நீலகிரிக்கு வந்தபோது ஆதிவாசி மாணவனை காலணியை கழற்ற சொன்னது குறித்து...

பதில்: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர். அவருக்கு சுமார் 70 வயதாகிறது. அவர், அணிந்திருந்த காலணிக்கும், காலிற்கும் இடையே மாட்டிக்கொண்ட குச்சியை குனிந்து எடுக்க முடியவில்லை. அதனால், அருகாமையில் இருந்த சிறுவனை அழைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதை அவர் தெளிவாகத் தெரிவித்ததுடன் அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். மேலும், பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்திருக்கிறார்.

அந்த சிறுவன் என்னுடைய பேரன் போல் இருக்கிறார். உதவிக்குத் தான் அழைத்தேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அதை பெரிதுபடுத்திப் பேசுகிறார்கள். இதனை ஊடகங்களும், பத்திரிகைகளும் பெரிதுபடுத்துவது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளோ, எவரும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடமாட்டார்கள்.

சொந்த கருத்து

அதேபோல, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பக்திமான், அது நன்றாகத் தெரியும். அவர், அவருடைய சொந்தக் கருத்தைச் சொல்லியிருக்கலாம், அது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தல்ல என்பதையும் மீன்வளத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கேள்வி: கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், வறட்சியை சமாளிக்க எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?

பதில்: வறட்சி என்ற சொல்லே இந்த வருடம் இல்லை. கோவை பகுதிகளைச் சுற்றி நல்ல மழை பொழிந்துள்ளது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி காட்சியளிக்கிறது.

தகுதியை நிர்ணயம் செய்வது எப்படி?

கேள்வி: 9 மற்றும் 11-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா?

ப: அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் அந்த மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? அப்படிச் செய்தால் மாணவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். தேர்வு வைத்தால் தான், அந்த மாணவனின் தகுதியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும். பெற்றோருடைய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ரத்து செய்திருக்கிறார்.

இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை

கே: 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றனரே?

ப: இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை எவரும் தெரிவிக்கவில்லையே. அவ்வாறு பேசுவது உண்மையல்ல. 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் பதில் அளித்தார்.

Next Story