மாமியாருடன் தகராறில் விபரீத முடிவு 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி


மாமியாருடன் தகராறில் விபரீத முடிவு 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 Feb 2020 12:30 AM GMT (Updated: 8 Feb 2020 8:29 PM GMT)

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமான 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய், தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மூலசெங்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 33). இவர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்துள்ளார். இவருடைய மனைவி திவ்யா(30). இவர்களுக்கு வர்னிகா(3), தன்ஷிகா(1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் தங்கள் விவசாய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று காலையில் இளையராஜாவின் தாயார் வழக்கம் போல் காலையில் எழுந்தவுடன், தங்கள் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றுக்கு முகம் கழுவ சென்றார்.அப்போது கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் அவர் எட்டி பார்த்தார். அங்கு மருமகள் திவ்யா, குழந்தை வர்னிகாவுடன் கிணற்றில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

2 குழந்தைகள் சாவு

உடனே அவர் வீட்டிற்கு விரைந்து வந்து இளையராஜாவிடம் தகவல் தெரிவித்தார். மேலும் இது குறித்து அறிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்து கிணற்றில் உயிருக்கு போராடிய திவ்யா மற்றும் குழந்தை வர்னிகாவை மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை வர்னிகா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அவளை பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார். பின்னர் முதுகெலும்பு உடைந்து உயிருக்கு போராடிய திவ்யாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மற்றொரு குழந்தை தன்ஷிகாவை பொதுமக்கள் கிணற்றில் தேடினர். பின்னர் அந்த குழந்தையின் உடலையும் அங்கிருந்து மீட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாமியாருடன் தகராறு

இந்த சம்பவம் குறித்து இளையராஜா கொடுத்த புகாரில், தனது மனைவி 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் திவ்யா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திவ்யாவுக்கும், அவருடைய மாமியாருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதாகவும், இதனால் மனம் உடைந்து திவ்யா இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story