வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்


வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 8 Feb 2020 11:00 PM GMT (Updated: 8 Feb 2020 10:30 PM GMT)

சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சென்னை,

சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலிலும் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலை, மூலவர், உற்சவருக்கு, சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.

இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பலர், பன்னீர், புஷ்பக்காவடி எடுத்தும், மொட்டை போட்டும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும், அன்னதானம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இரவு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ராதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

குன்றத்தூர் முருகன் கோவில்

குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு மினி பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல், சென்னை கந்தக்கோட்டம், பெசன்ட்நகர் அறுபடை வீடு, பாம்பன் சுவாமிகள் கோவில், கபாலீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், குரோம்பேட்டை நேரு நகர், குமரன் குன்றம் கோவில், வல்லக்கோட்டை, நடுபழனி, திருப்போரூர் உள்ளிட்ட கோவில்களிலும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

எர்ணாவூர்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எர்ணாவூர் முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. 10-வது ஆண்டாக நடைபெற்ற இந்த பால்குட ஊர்வலத்தில், 1008 பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கி எர்ணாவூர் காமராஜர் நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

அதைத்தொடர்ந்து, முருகனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கபாலீசுவரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு சாமி தெப்பத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பக்குளத்தின் 4 திசைகளிலும் பக்தர்கள் அமர்ந்து தெப்பத்தில் சாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது. பின்னர் சாமி, அம்பாள் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் செய்து வருகின்றனர்.

காரணீசுவரர் கோவில்

இதேபோல் சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காரணீசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்பாள் தெப்பத்தில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேல்மருவத்தூர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நேற்று தைப்பூச பெருவிழா நடந்தது. இதையொட்டி குருஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் இல்லம் முன்பு நடைபெற்றது. ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைக்க, 5 பெண்கள் எடுத்துவந்தனர். ஜோதி ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்வலம் ஜோதித்திடலை அடைந்தததும் தைப்பூச ஜோதி கலசத்தின் முன்பு குருஜோதி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, பங்காரு அடிகளார் முன்னிலையில் தைப்பூச ஜோதியை ஏற்றினார். முன்னதாக அவருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story