திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனை? அதிகாரிகள், போலீசார் விசாரணை


திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனை? அதிகாரிகள், போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Feb 2020 10:30 PM GMT (Updated: 9 Feb 2020 7:54 PM GMT)

திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனையா? என அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதி யினர் ஒரு ஆண் குழந்தையை ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கி வளர்த்து வருவதாகவும், மற்றொரு தம்பதியினர் ஒரு ஆண் குழந்தையை வேறு ஒரு தம்பதிக்கு விற்றதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமத்திற்கும், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் திருவெறும்பூர் பகுதியில் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட தம்பதியினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் தங்கள் குழந்தைகள் தான் என கூறியுள்ளனர். ஆனாலும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினரும், போலீசாரும் சந்தேகமடைந்தனர். சம்பந்தப்பட்ட அந்த 2 குழந்தைகளையும் அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை

அந்த குழந்தைகளின் உண்மையான பெற்றோர் யார்? விற்கப்பட்ட குழந்தைகளா? கடத்தி வரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்ட போது கூறுகையில், ‘ 2 குழந்தைகள் விற்கப்பட்டதா? என்பது பற்றி முழு விசாரணைக்கு பின் தான் தெரியவரும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமத்தினர் இதனை விசாரித்து வருகின்றனர். அவர்கள் முறைப்படி புகார் கொடுத்தால் தான் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் புரோக்கர்கள் யாரேனும் உள்ளனரா? எனவும் விசாரிக்கப்படுகிறது’ என்றனர்.


Next Story