மார்த்தாண்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் திரளானவர்கள் பங்கேற்பு


மார்த்தாண்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் திரளானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Feb 2020 11:00 PM GMT (Updated: 9 Feb 2020 9:30 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி மார்த்தாண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குழித்துறை,

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நடந்தது.

மார்த்தாண்டம் முஸ்லிம் ஜமாத், குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மார்த்தாண்டம் ஜமாத் தலைவர் சர்தார்ஷா தலைமையில் நடந்த போராட்டத்தில் மார்த்தாண்டம் பங்கு பணியாளர் ஜேம்ஸ் அமல்ராஜ், மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அப்துல் லத்தீப், பொதுச்செயலாளர் எம்.ஏ.கான், மார்த்தாண்டம் ஜமாத் செயலாளர் முகமது கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

நாஞ்சில் சம்பத்

கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை 11 மாநில அரசுகள் எதிர்க்கிறது. மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த சட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வரை சமரசம் செய்யாமல் போராடுவோம் என்றார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், மனோ தங்கராஜ், முன்னாள் குழித்துறை நகராட்சி தலைவர்கள் பொன்ஆசைத்தம்பி, டெல்பின், முன்னாள் கவுன்சிலர் பொன் சகாதேவன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் சாமுவேல் ஜார்ஜ், சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங், மார்த்தாண்டம் தொழில் வர்த்தகர் சங்க தலைவர் அல் அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story