மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்


மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 7:07 PM GMT)

திருவாரூரில் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 216 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சான்றிதழ்

அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டாரம் நொச்சியூர் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து பணியின் போது இறந்த முருகானந்தம் என்பவரின் வாரிசுதாரர் சங்கீதாவுக்கு பதிவறை எழுத்தராக பணிநியமன ஆணையையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் கலெக்டர் வழங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமசந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூ‌‌ஷணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story