நாட்டரசன்கோட்டை பகுதியில், குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


நாட்டரசன்கோட்டை பகுதியில், குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 10 Feb 2020 10:15 PM GMT (Updated: 10 Feb 2020 7:41 PM GMT)

நாட்டரசன்கோட்டை பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதால், அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல் உள்பட 330 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.

இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந் தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலர் காளிமுத்தன் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்லம், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் உள்ள உணவு பொருட்களை பாத்திரங்களுடன் எடுத்து சென்று விடுகின்றன. அத்துடன் வீடுகளின் ஓடுகளையும் சேதப்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

மேலும் பேரூராட்சி பகுதியில் நாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பேரூராட்சி பகுதியில் உள்ள குரங்கு மற்றும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 

Next Story