கீரமங்கலம் பகுதியில் நெற்கதிர் அறுவடை பணியில் பெண்கள் எந்திரம் கிடைக்காததால் விவசாயிகள் திண்டாட்டம்


கீரமங்கலம் பகுதியில் நெற்கதிர் அறுவடை பணியில் பெண்கள் எந்திரம் கிடைக்காததால் விவசாயிகள் திண்டாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2020 10:45 PM GMT (Updated: 10 Feb 2020 8:03 PM GMT)

கீரமங்கலம் பகுதியில் நெற்கதிர்களை அறுவடை செய்ய எந்திரம் கிடைக்காததால், விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இதனால்பெண்கள் மூலம் கதிர் அறுவடை பணி நடைபெறுகிறது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் தாக்கியதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஓரளவு பருவமழை பெய்ததால் விவசாய பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டது. சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கீரமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் ெநற்கதிர்களை அறுவடை செய்ய எந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

அறுவடை செய்யும் பெண்கள்

கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் வயல் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், 15 நாட்களுக்கு மேலாக எந்திரம் கிடைக்காததால் அறுவடை செய்ய முடியாமல் வயலில் நெல் உதிர்ந்து கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் பெண்களை அழைத்து வந்து, பழைய முறையில் கதிர்களை அறுத்து, அறுவடை நடைபெற்று வருகிறது. எந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டால், சில மணி நேரங்களில் அறுவடை பணி முடிந்துவிடும். ஆனால் பெண்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதால், அறுவடை பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெண்கள் மகிழ்ச்சி

இது குறித்து அறுவடையில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில், எந்திரங்கள் வந்து விட்டதால் கதிர் அறுவடை செய்யும் வேலை பல ஆண்டுகளாக எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மற்ற விவசாய வேலைகள் செய்து வந்தோம். ஆனால் இந்த ஆண்டு அறுவடைக்கு எந்திரம் கிடைக்காததால் வயல்களில் நெற்கதிர்கள் சேதமடையும் நிலையில் இருந்தது. அதனால் அறுவடை செய்ய எங்களை அழைத்து வந்தார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு கையில் கதிர் அறுவடை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது, என்றனர்.

கதிர் அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் கூறுகையில், வழக்கம் போல் விவசாய பணிகள் செய்யும் ஆட்களை வைத்து விவசாயம் செய்தோம். இடையில் விவசாய கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என எந்திரங்களை கொண்டு வந்தார்கள். இதனால் எந்திரங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் எந்திரம் கிடைக்கவில்லை. இதனால் 20 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்களை இப்போதுதான் கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்கிறோம். வேளாண்துறை போதிய எந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும், என்றனர்.


Next Story