தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 9:30 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்மனைவி, மகனுடன்தொழிலாளி தீக்குளிக்க முயன்றார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாகலஅள்ளி காலனியை சேர்ந்தவர் சித்தன். தொழிலாளி. இவருடைய மனைவி ஆண்டிச்சி. இந்த நிலையில் சித்தன், மனைவி மகனுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு இவர், மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது மண்எண்ணெயை ஊற்றி தானும் தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆண்டிச்சி கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மோட்டார்சைக்கிளை மர்மநபர்கள் தீவைத்து எரித்தனர். இதில் தொடர்பு இல்லாத எனது மகன் மீது தொப்பூர் போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து உள்ளனர்.

பொய் புகார்

இதேபோல் ஏற்கனவே என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது காரணம் இன்றி கொடுக்கப்பட்ட பொய் புகார்களால் எந்த வித தவறும் செய்யாமலேயே பாதிக்கப்பட்டு உள்ளோம். இதனால் மனமுடைந்து நாங்கள் 3 பேரும் தீக்குளிக்க முயன்றோம்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி எங்கள் குடும்பத்தினர் மீது பொய்யான புகார்களை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story