கர்ஜத் ஜெயிலில் இருந்து 5 கைதிகள் தப்பி ஓட்டம்: கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியவர்கள்


கர்ஜத் ஜெயிலில் இருந்து 5 கைதிகள் தப்பி ஓட்டம்: கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியவர்கள்
x
தினத்தந்தி 11 Feb 2020 12:01 AM GMT (Updated: 11 Feb 2020 12:01 AM GMT)

கொலை, கற்பழிப்பு மற்றும் ஆயுத பதுக்கல் வழக்கில் சிக்கிய 5 கைதிகள் கர்ஜத் சப்-ஜெயிலில் இருந்து தப்பி ஓடினர்.

மும்பை,

ராய்காட் மாவட்டம் கர்ஜத்தில் பழமையான சப்-ஜெயில் ஒன்று உள்ளது. இந்த ஜெயிலில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயில் வளாக உள்பகுதியில் ஒரு காவலரும், ஜெயில் வளாகத்தை சுற்றி 3 காவலர்களும் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு இருந்தனர். இதில் இரவு 8 மணியளவில் காவலர் ஒருவர், ஜெயிலுக்குள் சென்று வழக்கமான சோதனை நடத்தினார். அப்போது 5 கைதிகள் மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து ஜெயில் காவலர்கள் மாயமான கைதிகளின் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் சிறை மேற்கூரையில் துளைபோட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கைதிகள் தப்பிஓடிய சிறை, சப்-ஜெயில் வளாகத்தில் ஆய்வு நடத்தினர்.

இந்தநிலையில் கைதிகள் தப்பிஓடிய சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் தப்பிஓடிய கைதிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தப்பிஓடிய 5 கைதிகளும் கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இதில் தயனேஷ்வர் துக்காராம் கோல்கே என்ற கைதி ஆயுத பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். அக்சய் ராம்தாஸ், மோகம் குன்திலிக், சந்திரகாந்த் மகாதேவ் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் சிக்கியவர்கள். கங்காதர் ஜெகதாப் என்ற கைதி கற் பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அகமதுநகர் மாவட்டம் ஜாம்கெட் தாலுகாவை சேர்ந்தவர்கள் ஆவர். கொடூர குற்றங்களில் ஈடுபட்ட 5 கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story