செல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல்


செல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2020 12:05 AM GMT (Updated: 11 Feb 2020 12:05 AM GMT)

அதிக நேரம் செல்போன் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருத்தரங்கில் டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நரம்பியல் துறை தலைவர் கிங்ஸ்லி ஜெபாசிங் வரவேற்றார். தலைமை விருந்தினராக மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மூளைகளில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் பல நோய்கள் உருவாகின்றன. இதில் ஒன்று தான் வலிப்பு நோய். டாக்டர்களின் ஆலோசனைபடி சரியான நேரத்தில் முறைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தலாம். பொதுவாக 100-ல் 80 சதவீதம் பேர் வலிப்பு நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

செல்போன்-டி.வி.

அதிக நேரம் செல்போன், டி.வி பார்ப்பதாலும், சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் வலிப்பு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வலிப்பு நோயை சிலர் கொடிய நோய் என்று நினைக்கிறார்கள். இது தவறானது. நோய் ஏற்படுவதற்கான காரணம் அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை முறை அளித்தால் அதனை குணப்படுத்திவிடலாம். அதன்படி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளன.

சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நரம்பியல் துறை சார்ந்த டி.எம்.(நியூராலஜி) பட்டப்படிப்பு உள்ளது. இதேபோல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் துறைக்கு டி.எம்.(நியூராலஜி) கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை இன்னும் சில மாதங்களில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவிகளின் கேள்வி

கருத்தரங்கில் மருத்துவ கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன் மற்றும் துறை பேராசிரியர்கள், செவிலிய மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாணவிகளின் கேள்விகளுக்கு நரம்பியல் துறை பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

Next Story