காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்


காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 8:17 PM GMT)

இளையான்குடி யூனியன் கூட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இளையான்குடி, 

இளையான்குடியில், யூனியன் கூட்டம் குழுத்தலைவர் முனியாண்டி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பர்னபாஸ் அந்தோணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் 3-வது வார்டு கவுன்சிலர் முருகானந்தம், தோக்கனேந்தல் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார். 8-வது வார்டு கவுன்சிலர் கீர்த்தனா, காவிரி கூட்டுக்குடிநீர் குறைவின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், கழிவுநீரை தேங்காமல் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

16-வது வார்டு கவுன்சிலர் முருகன், மின்சாரம், குடிநீர் சம்பந்தமான குறைகளை கேட்க அதிகாரிகள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கொண்டார். 4-வது வார்டு கவுன்சிலர் செழியன், காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 9-வது வார்டு கவுன்சிலர் சீமைச்சாமி, மின்வாரிய மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அபாயம் உள்ளது. எனவே அதை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூட்டத்திற்கு வராத துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story