தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண் குழந்தைகள் சாவு போலீசார் விசாரணை


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண் குழந்தைகள் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2020 10:15 PM GMT (Updated: 11 Feb 2020 9:09 PM GMT)

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட 2 பெண் குழந்தைகள் திடீரென இறந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 13 நாட்களே ஆன அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் குழந்தையை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். இதையடுத்து குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் குழந்தை திடீரென இறந்தது.

இதேபோல் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வளர்க்கப்பட்ட அவந்திகா என்ற 5 மாத பெண் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆசிரம ஊழியர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே அந்த பெண் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண் குழந்தைகள் இறந்தது தொடர்பாக மகேந்திரமங்கலம் மற்றும் ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story