கும்பகோணம் அருகே அறுவடை எந்திர டிரைவர் அடித்துக்கொலை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 5 பேர் கைது


கும்பகோணம் அருகே அறுவடை எந்திர டிரைவர் அடித்துக்கொலை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2020 10:08 PM GMT (Updated: 11 Feb 2020 10:08 PM GMT)

கும்பகோணம் அருகே அறுவடை எந்திர டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விட்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா. இவருடைய கணவர் மனோகரன். இவர் தனது உறவினர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை பராமரித்து வந்தார். இந்த நிலத்தை உறவினர், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார்.

இந்த நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. அதை அறுவடை செய்வதற்காக மனோகரனின் உறவினரிடம் இருந்து நிலத்தை வாங்கியவர் அறுவடை எந்திரம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நாகமங்கலம் மூலங்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் காளிமுத்து (வயது 53) என்பவர் நேற்று அறுவடை எந்திரத்தை கொண்டு வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்.

இதை அறிந்த மனோகரன் மற்றும் மணி, இளங்கோவன், கார்த்தி, குணசேகரன் உள்ளிட்டோர் அங்கு சென்று அறுவடை பணிகளை தடுத்து எந்திர டிரைவர் காளிமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தகராறில் காளிமுத்துவை, மனோகரன் மற்றும் அவருடைய தரப்பினர் கைகளால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் மயங்கி விழுந்த காளிமுத்துவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி காளிமுத்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவின் கணவர் மனோகரன், மணி, இளங்கோவன், கார்த்திக், குணசேகரன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அறுவடை எந்திர டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story