பள்ளி–கல்லூரி நிர்வாகிகளுடன் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்


பள்ளி–கல்லூரி நிர்வாகிகளுடன் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2020 11:00 PM GMT (Updated: 12 Feb 2020 1:05 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுடன் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுடன் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

விழிப்புணர்வு கூட்டம் 


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல் தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது;–

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் தங்களது வளாகத்தில் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 500 முதல் 1000 மாணவர்கள் கொண்ட கல்லூரி நிர்வாகிகள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையரகத்தின் மூலம் வழங்கப்படும் ஆரோக்கிய உணவு வளாகம் என்ற சான்றிதழை பெற வேண்டும். பின்னர், குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை கொண்ட கல்லூரிகளையும் சான்றிதழ் பெற ஊக்கப்படுத்திட வேண்டும். கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சத்தான பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை 


பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நிர்வாகிகள் தங்களது வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் தங்களது வளாகத்தில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன் (தூத்துக்குடி–1) காளிமுத்து (தூத்துக்குடி–2), முருகேசன் (கோவில்பட்டி), முனியராஜ் (ஓட்டப்பிடாரம்), சிவபாலன் (விளாத்திகுளம்) மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story