கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 12 Feb 2020 9:30 PM GMT (Updated: 12 Feb 2020 2:22 PM GMT)

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, உதவி கலெக்டர் அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

முற்றுகை 


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் 5–வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் தலைமையில், அனைத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தரமாக வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படவில்லை. மேலும் அங்குள்ள 4 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.

இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல் போன்றவற்றுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. மேலும் அங்கு புரோக்கர்களின் தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு 

இதற்கிடையே கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் ஆய்வு நடத்துவதற்காக வந்தார். அப்போது அவரிடம், கோவில்பட்டியில் உள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக, கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

Next Story