டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி, பா.ஜ.க. அரசுக்கு பாடம் - காதர் முகைதீன் பேட்டி


டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி, பா.ஜ.க. அரசுக்கு பாடம் - காதர் முகைதீன் பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2020 9:45 PM GMT (Updated: 12 Feb 2020 7:58 PM GMT)

‘டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி என்பது, பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளது’ என்று காதர் முகைதீன் கூறினார்.

தென்காசி, 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் தென்காசியில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெற்று முதல்-அமைச்சராகியுள்ளார். இதற்கு காரணம் அவர் செய்த சேவை. அதற்காக அந்த மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர். குறிப்பாக பட்ஜெட்டில் 26 சதவீதம் கல்விக்காக ஒதுக்கீடு செய்தார். மக்களின் நலன் கருதி சேவை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சில பகுதிகளில் 5 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கு காரணம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட மசோதா. இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். தலைநகரில் இந்தியாவை ஆளும் ஆட்சிக்கு எதிராக அரசு உருவானது, இந்தியா முழுவதும் ஏற்படுவதற்கு இது ஒரு முன்னோட்டம் ஆகும். டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றியானது, பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பான பகுதியாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இது மத்திய அரசின் அனுமதியுடன் அறிவித்தாரா? என்பது தெரியவில்லை.

ஏனென்றால் சட்டசபையில் இதுகுறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு அதனை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் இது முழுமையாக நிறைவேறும். இருந்தாலும் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு முடியாது என்றால் அது முடியாது தான். ஏற்கனவே நீட் தேர்விற்கு சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இவ்வாறு காதர் முகைதீன் கூறினார்.

முன்னதாக, பல்வேறு அமைப்புகளில் இருந்து பலர் விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் காதர்முகைதீன் முன்னிலையில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., கட்சியின் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநில செயலாளர் காயல் மகபூப், துணைச்செயலாளர் இப்ராகிம் மக்கி, மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், செயலாளர் இக்பால், செய்தி தொடர்பாளர் புளியங்குடி சாகுல் ஹமீது உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story