வரதட்சணை கொடுமையால் பெண் அடித்துக்கொலை கணவர் கைது


வரதட்சணை கொடுமையால் பெண் அடித்துக்கொலை   கணவர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2020 10:00 PM GMT (Updated: 12 Feb 2020 8:16 PM GMT)

மும்பையில் வரதட்சனை கொடுமையால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை விக்ரோலியை சேர்ந்தவர் ரோனாலாட்(வயது33). இவரது மனைவி இமா ஜோசப். இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ரோனாலாட் அடிக்கடி மனைவியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்றும் வழக்கம்போல் மனைவியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி தகராறில் ஈடுபட்டார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இமா ஜோசப் பணம் வாங்கி தர முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது. இதில், கடும் ஆத்திரமடைந்த ரோனாலாட் மனைவி இமா ஜோசப்பை சரமாரியாக தாக்கினார். இதில், படுகாயமடைந்த இமா ஜோசப் வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

கைது

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இமா ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோனாலாட்டை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story