மசினகுடி-சிங்காரா இடையே சாலையை கடந்த கருஞ்சிறுத்தையால் பரபரப்பு


மசினகுடி-சிங்காரா இடையே சாலையை கடந்த கருஞ்சிறுத்தையால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 10:45 PM GMT (Updated: 13 Feb 2020 4:51 PM GMT)

மசினகுடி-சிங்காரா இடையே சாலையை கடந்த கருஞ்சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக மாமிச உண்ணிகளுக்கு தேவையான உணவு அதிகளவில் முதுமலையில் கிடைப்பதால், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோன்று சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கையும் கூடி உள்ளது. தற்போது 80-க்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.

அதில் 3 கருஞ்சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மரபணு குறைபாடு காரணமாக சிறுத்தைப்புலிகள் நிறம் மாறி கருப்பு நிறத்தில் இருப்பதாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய கருஞ்சிறுத்தைகளை காண்பது மிகவும் அரிது ஆகும்.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடியில் இருந்து சிங்காரா மின் நிலையம் செல்லும் சாலையை நேற்று முன்தினம் கருஞ்சிறுத்தை ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சுற்றுலா பயணிகளின் வாகனம் ஒன்று வந்தது. இதை கண்ட கருஞ்சிறுத்தை, வாகனத்தை நிமிர்ந்து பார்த்தது. உடனே டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். மேலும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு தொற்றி கொண்டது.சிறிது நேரம் கழித்து சாலையை மெதுவாக கருஞ்சிறுத்தை கடந்து சென்றது. அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு, தங்களது செல்போன் மற்றும் கேமராவில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்து வாகனம் புறப்பட்டு சென்றது.

Next Story