சிக்கமகளூரு வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க கோரி முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் மந்திரி சி.டி.ரவி மனு


சிக்கமகளூரு வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க கோரி   முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் மந்திரி சி.டி.ரவி மனு
x
தினத்தந்தி 13 Feb 2020 10:45 PM GMT (Updated: 13 Feb 2020 8:50 PM GMT)

சிக்கமகளூரு வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க கோரி முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் மந்திரி சி.டி.ரவி மனு கொடுத்தார்.

சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுற்றுலா துறை மந்திரியுமான சி.டி.ரவி மற்றும் சிக்கமகளூரு-உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா, சிக்கமகளூரு மாவட்ட அரசியல் கட்சியினர் நேற்று முன்தினம் மாலை முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், கர்நாடக பட்ஜெட்டில் சிக்கமகளூரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் அவர்கள் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். இதுகுறித்து மந்திரி சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரூ.350 கோடி

கர்நாடக பட்ஜெட்டில் சிக்கமகளூரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். அஜ்ஜாம்புரா தாலுகாவில் உள்ள பத்ரா கால்வாயில் இருந்து அதனை சுற்றியுள்ள 187 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்துக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் வலியுறுத்தியுள்ளோம். சிக்கமகளூரு மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வீடுகள் கட்டி கொடுப்பது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். சிக்கமகளூரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முதல்-மந்திரி கூடுதல் நிதி ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story