நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை முன்னாள் காதலனை போலீஸ் தேடுகிறது


நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவதாக மிரட்டல்   விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை   முன்னாள் காதலனை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 9:01 PM GMT)

நெருக்கமாக இருந்த படங்களை வருங்கால கணவருக்கு அனுப்புவதாக மிரட்டியதால் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக முன்னாள் காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு, 

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா மல்லேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மேக்னா (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா (22). மேக்னாவும், மணிகண்டாவும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் காதல் ஜோடி அடிக்கடி சுற்றுலா தலங்களுக்கு தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த காதலுக்கு மேக்னாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை ஏற்க மறுத்த மேக்னாவின் பெற்றோர், தங்களது மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலில் வேறொரு வாலிபரை திருமணம் செய்ய மேக்னா மறுத்து வந்துள்ளார். பின்னர் பெற்றோரின் பேச்சை கேட்டு வேறொரு வாலிபரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார்.

வேறொருவருடன் திருமணம் நிச்சயம்

இதைதொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேக்னாவுக்கும், அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் மேக்னா, மணிகண்டாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதை அறிந்த மணிகண்டா, மேக்னாவை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது. உடனே திருமணத்தை நிறுத்த வேண்டும் நான் எப்போது அழைத்தாலும் என்னுடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலும், உனது வருங்கால கணவருக்கும் அனுப்பிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். அத்துடன் மேக்னாவின் வாட்ஸ்- அப்க்கும் நெருக்கமாக இருக்கும் படங்களை மணிகண்டா அனுப்பியுள்ளார். இதனால் மேக்னா வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.

விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேக்னாவின் பெற்றோர், கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்த சமயத்தில் புதுப்பெண் மேக்னா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென்று மேக்னா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதுடன், உல்லாசத்துக்கு அழைத்ததால் மனம் உடைந்து மேக்னா தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக மேக்னாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டா மீது தொட்டகாலவந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மணிகண்டா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story