பள்ளி, கல்லூரிகளில் ‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு - கலெக்டர் தகவல்


பள்ளி, கல்லூரிகளில் ‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 11:57 PM GMT)

பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் 1000-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கியுள்ளது. தற்போது ‘கொரோனா’ வைரஸ் சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன. வழக்கமான வைரஸ் காய்ச்சல் போன்று சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல், அது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து எளிதாக அடுத்தவருக்கு பரவுகிறது. இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை துணியால் மூடிக்கொள்வதாலும், 30 வினாடிகள் தொடர்ச்சியாக சோப்பினால் கைகளை கழுவிக்கொள்வதாலும் அந்த வைரஸ் பரவாமல் எளிதில் தடுக்கலாம். இதற்கிடையே தமிழக அரசு சார்பில் ‘கொரோனா’ வைரஸ் அறிகுறிகள் யாருக்காவது கண்டறியப்பட்டால் அவர் களை தீவிரமாக கண்காணிக்கவும், அவர்களுக்கான மருத்துவ ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கேரள மாநில எல்லை வழியாக தேனி மாவட்டத்திற்கு வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை கண்காணிக்கும் வகையில் மாநில எல்லை நுழைவு வாயிலான லோயர்கேம்ப், கம்பம்மெட்டு மற்றும் போடிமுந்தல் ஆகிய இடங்களில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு, தன்சுத்தம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுகுறித்து சுகாதாரத்துறையினர் நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story