நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவு


நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2020 12:15 AM GMT (Updated: 14 Feb 2020 12:00 AM GMT)

நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பல்வேறு பணிகள் நடக்க உள்ளன. முதற்கட்டமாக ரூ.78½ கோடி திட்ட மதிப்பீட்டில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரும், ஸ்மார்ட் சிட்டி தலைவருமான பாஸ்கரன் நேற்று நெல்லை வந்தார். அவர் மாநகர பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். அந்த பணிகளைவிரைந்து முடிக்கும் படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர், நெல்லை மாநகராட்சி சார்பில் ராமையன்பட்டி குப்பை சேகரிக்கும் வளாகத்தில் 20 மெட்ரிக் டன் அளவு குப்பைகளை விஞ்ஞான ரீதியில் நுண்ணுயிர் உரமாக மாற்றும் மைய கட்டிட கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார்.

மேலும் டவுன் போஸ் மார்க்கெட் நவீனப்படுத்தப்படுவதால் அங்குள்ள வியாபாரிகளின் நலன் கருதி அரசு பொருட்காட்சி வளாகத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாற்று கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கடைகளையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, நகராட்சிகளின் நிர்வாக பொறியாளர் திருமாவளவன், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக இயக்குனர் நாராயண நாயர், செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குனர் அண்ணா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story