புல்வாமா தாக்குதல், காதலர்தினம்: வைகை அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பினர்


புல்வாமா தாக்குதல், காதலர்தினம்: வைகை அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பினர்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 1:21 PM GMT)

புல்வாமா தாக்குதல் தினம், காதலர் தினத்தையொட்டி வைகை அணையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி,

புல்வாமா தாக்குதல் தினம், காதலர் தினத்தையொட்டி வைகை அணையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அணைக்கு வந்த காதல் ஜோடிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.

காதலர் தினம் 

உலகமெங்கும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காதலர் தினத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. பொது இடங்களில் வரும் காதல் ஜோடிகளை சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பை வெளிக்காட்டும் செயல்களும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காதலர் தினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அணையின் பூங்கா பகுதிக்கு வந்த சில காதல் ஜோடிகளை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் திருப்பி அனுப்பினர்.

போலீஸ் பாதுகாப்பு 

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலில் 45 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட முதலாம் ஆண்டு தினமும் நேற்று அனுசரிக்கப்பட்டதால் வைகை அணையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவண தெய்வேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் 15–க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அணையின் மதகுபகுதி, நீர்மின்நிலையம் மற்றும் பூங்கா பகுதிகளுக்குள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வைகை அணையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட சிலரையும் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் வைகை அணைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்துமுன்னணி எதிர்ப்பு 

இந்தநிலையில் நேற்று மதியம் இந்து முன்னணி அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.செல்வம் தலைமையில் 10–க்கும் மேற்பட்டோர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலை மற்றும் தாலியுடன் வைகை அணைக்கு வந்தனர். அணைக்கு வரும் காதலர்களிடம் மாலை மற்றும் தாலியை கொடுத்து திருமணம் நடத்தி வைக்க போவதாக கூறினர். ஆனால் போலீசார் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காதல் ஜோடிகள் யாரும் வைகை அணைக்கு வரவில்லை. இதனால் சிறிது நேரத்துக்கு பிறகு இந்து முன்னணி அமைப்பினர் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் வைகை அணையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story