ஊரப்பாக்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு


ஊரப்பாக்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Feb 2020 10:15 PM GMT (Updated: 14 Feb 2020 8:02 PM GMT)

ஊரப்பாக்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்ததாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 65), இவர் நேற்று முன்தினம் ஊரப்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். பின்னர் ரேஷன் கடையில் கோதுமை, அரிசி, உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு ஜே.சி.நகர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தார்.

அப்போது அந்த வாலிபர் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது நல்ல சம்பளம் தருவார்கள் என்று மூதாட்டியிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

இதனால் மூதாட்டி வீட்டில் சும்மா இருக்கிறோமே வீட்டு வேலைக்கு செல்லலாம் என்று அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். அந்த வாலிபர் மூதாட்டியை 4 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

ஆதனூர் சிவன் கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் மூதாட்டியிடம் இங்குதான் என்ஜினீயர் வருவார் அவர் வந்து உங்களை அழைத்துச் செல்வார். நல்ல இடம், நல்ல சம்பளம் தருவார்கள்.

நீங்கள் உடனடியாக அந்த வேலையில் சேர்ந்து விடுங்கள் என்று மூதாட்டியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாலிபர் மூதாட்டி அணிந்து இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து ராணி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஊரப்பாக்கத்தில் இருந்து ஆதனூர் செல்லும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story