பண்ருட்டியில் பயங்கரம்: ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு இளம்பெண் கொலை - காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்


பண்ருட்டியில் பயங்கரம்: ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு இளம்பெண் கொலை - காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 17 Feb 2020 12:15 AM GMT (Updated: 16 Feb 2020 9:35 PM GMT)

பண்ருட்டியில் காதலர் தினத்தன்று வெளியே சென்று வந்த மனைவியை, ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல்(வயது 27). கார் டிரைவர். இவரது மனைவி ராஜேஸ்வரி( 25). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வர்‌ஷினி (6), ராகுல் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். குமரவேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அன்வர்‌ஷா நகர் 4-வது தெருவில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியேறினார்.

குமரவேல் வாடகைக்கு கார் ஓட்டி வந்ததால், இரவு நேரங்களிலும் சவாரிக்காக வெளியூர் சென்று விடுவார். அந்த சமயத்தில் ராஜேஸ்வரி, செல்போனில் சிலரிடம் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த குமரவேலுக்கு மனைவி மீது ஆத்திரம் ஏற்பட்டு, அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த குமரவேல் இரும்பு கம்பியால் ராஜேஸ்வரியின் தலையில் தாக்கினார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

இருப்பினும் கோபம் தீராத குமரவேல், அங்கு கிடந்த ஆட்டு உரல் கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டார். இதில் தலை சிதைந்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், இரவோடு இரவாக 2 குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து குமரவேல் சென்றுவிட்டார்.

நேற்று காலை அவரது வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்தோடியபடி இருந்தது. பூட்டி கிடந்த வீட்டில் இருந்து ரத்தம் வழிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு படுக்கை அறையில் ராஜேஸ்வரி, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கார் டிரைவரான குமரவேல் திருநங்கைகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அதே வேளையில் ராஜேஸ்வரி டிக்-டாக் மோகத்தில் மூழ்கியுள்ளார். அவர் சில வீடியோக்களை எடுத்து, அதனை டிக்-டாக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் சிலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இது குமரவேலுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம் குமரவேல், திருநங்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து ராஜேஸ்வரி கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் காதலர் தினமான கடந்த 14-ந்தேதி காலையில் ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றவர், இரவில்தான் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதன் காரணமாக மனைவி மீதான கோபம் குமரவேலுக்கு மேலும் அதிகரித்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு, இரவில் தூங்கி கொண்டு இருந்த ராஜேஸ்வரியை இரும்பு கம்பியால் அடித்தும், ஆட்டு உரல் கல்லை தூக்கி தலையில் போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

போலீசில் சிக்கி கொள்வோம் என்று கருதிய குமரவேல், 2 குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான காடாம்புலியூருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது தாய் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு, அவர் மட்டும் தலைமறைவானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே காடாம்புலியூரில் பதுங்கி இருந்த குமரவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Next Story